ஆட்டோ கவிழ்ந்து 16 பேர் காயம்

நாமகிரிப்பேட்டை, ஆக.4: நாமகிரிப்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 16க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற கொங்களம்மன் கோவில் உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று கோயிலுக்கு வந்து சென்றனர். அதேபோல் சீராப்பள்ளி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட பெண்கள், சரக்கு ஆட்டோவில் நேற்று மாலை கொங்களம்மன் கோயிலுக்கு சென்றனர். ஆட்டோவை சீராப்பள்ளி பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (50) ஓட்டி சென்றார். கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வந்து கொண்டிருந்த போது, சின்ன காக்காவேரி அருகே பெட்ரோல் பங்க் பக்கம் வந்த போது கட்டுபாட்டை இழந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது.

இதில், வனிதா (26), ராமாயி (65), பாப்பா (48), சரஸ்வதி (42), கல்பனா (46), அத்தாயி (70), குழந்தை வினித்ரா, லட்சுமி (58), சின்னப்பொண்ணு (65), ஜஸ்வின் (10), ஜெயம்மாள் (44), ருக்மணி (40), இளையநிலா (13), இளங்கோ, (45), பரிமளா (45) மற்றும் தங்கமணி (48) ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் தனியார் மருத்துவமனை மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோ கவிழ்ந்து 16 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: