சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினம்: திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர் தீரன் சின்னமலை. இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர் பயிற்சியை கற்று தேர்ந்த இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். 1801ல் ஈரோடு காவிரி கரையிலும், 1802ல் ஓடாநிலையிலும், 1804ல் அரச்சலுாரிலும் நடந்த போர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.

இதையடுத்து ஆங்கிலேயர்கள் இவரை 1805 ஜூலை 31ல் அவரை துாக்கிலிட்டனர். இருப்பினும் அவர் உடல் ஆகஸ்ட் 3ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று மாவீரன் தீரன் சின்னமலை 218ம் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்திருக்கக்கூடிய தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சரை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, சாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மற்றும் அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். அதேபோல், தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

The post சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218வது நினைவு தினம்: திருவுருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!! appeared first on Dinakaran.

Related Stories: