சோழவந்தான், ஜூலை 28: சோழவந்தான் அருகே விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில், திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றங்கரையில் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலின், 29ம் ஆண்டு திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் பூசாரி துரை மணிகண்டன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி வருகிறார். இதைத்தொடர்ந்து, திருவிழாவின் ஒரு பகுதியாக கடந்த 21ம் தேதி திருவிளக்கு பூஜை, 22ம் தேதி பூச்சொரிதல் விழா ஆகியவை நடைபெற்றது.
பின்னர் கடந்த 25ம் தேதி ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, மாவிளக்கு எடுத்து கோயிலுக்கான தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று முன் தினம் மாலை திரளான பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா நாட்களில் பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
The post சோழவந்தான் அருகே விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.