மாரிபுத்தூர் செல்லியம்மன் கோயில் ஆடி தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

செய்யூர்: மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் ஆடி தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மாரிபுத்தூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆடி மாதத்தை முன்னிட்டு இக்கோயிலில் தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த 25ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் இவ்விழா துவங்கப்பட்டு தினமும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு வான வேடிக்கையுடன் மின் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களிடையே எழுந்தருளி வீதி உலா வந்து காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், நெய், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டதோடு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன. அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் விசேஷ அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு வீதி உலா வந்தார். இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

The post மாரிபுத்தூர் செல்லியம்மன் கோயில் ஆடி தேர் திருவிழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: