பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி வழக்கு; தலைமறைவு குற்றவாளிக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

பெங்களூரு: பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்ததாக சையத் சுஹேல் சுஹைல் கான், முகமது உமர், ஜாஹித் தப்ரேஸ், சையத் முதாசிர் பாஷா, முகமது பாசில் ஆகிய 5 பேரை கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கொடுத்த தகவலின்படி மேலும் ஐந்து பேர் தேடப்பட்டு வருவதாக மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கைதான ஐந்து பேரும், கடந்த 2017ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதாகி பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும், சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த சில தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட தொடர்பால், அவர்கள் பெங்களூருவில் பல இடங்களிலும் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஜுனைத் அகமதுவுக்கு எதிராக லுக்அவுட் சுற்றறிக்கை (எல்ஓசி) வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஜுனைத் அகமது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஆனால் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் வளைகுடா நாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. விசாரணையின் ஒரு பகுதியாக, தற்போது அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

The post பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி வழக்கு; தலைமறைவு குற்றவாளிக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: