தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 3 படகோட்டிகள் மீட்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் வடூர் பென்கங்கை நதியையொட்டி பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் மறுபுறம் செல்வதற்கான பாலம் இல்லாததால் படகு மூலம் சென்று வருகின்றனர். இந்த நதியில் தாடிப், ரெண்ட்ல ஸ்ரீனிவாஸ், குஷால் ஆகியோர் நாட்டு படகு ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். படகு மூலம் பொதுமக்களை ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு ஏற்றிச்செல்லும் இவர்கள், சவாரி இல்லாத நேரங்களில் கரையோரம் படகுகளை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பென்கங்கை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையறிந்த தாடிப், ரெண்ட்ல ஸ்ரீனிவாஸ், குஷால் ஆகியோர் படகுகளை மரத்தில் கட்டிவைக்க நதியில் இறங்கிச்சென்றனர். ஆனால் தொடர்ந்து செல்ல முடியாமல் வெள்ளத்தில் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட அதே ஊரை சேர்ந்த உக்கு ஊசனா என்ற வாலிபர் கயிற்றை கட்டி லாரி ட்யூப் மூலம் வெள்ளத்தில் சென்று 3 பேரையும் லாரி டியூப்பில் கட்டி வெளியே இழுத்து வந்தார். உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் 3 பேரும் உயிர் தப்பினர். இதனால் கிராம மக்கள் உக்கு ஊசனாவை அனைவரும் பாராட்டினர்.

The post தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 3 படகோட்டிகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: