உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு: காவேரி மருத்துவமனை நடத்தியது

சென்னை: இந்தியாவில் தாய்ப்பால் அளிப்பதில் உள்ள நடைமுறைகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவேரி மருத்துவமனை மற்றும் ஹேப்பி மாம் ஹெல்த்கேர் இணைந்து நடத்தின. உலக தாய்ப்பால் தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தாய்ப்பால் தினத்தை அனுசரிக்கும் விதமாக காவேரி மருத்துவமனை மற்றும் ஹேப்பி மாம் ஹெல்த்கேர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தொடங்கி வைத்தார். மேலும் ‘தாய்ப்பால் ஊட்டுதலை ஊக்குவித்தல் – பணிபுரியும் பெற்றோரிடம் மாற்றத்தை ஏற்படுத்துதல்’ என்பதே இந்த ஆண்டிற்கான உலக தாய்பால் வார கருப்பொருளாகும். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் பேசியதாவது: பால்சுரப்பு மற்றும் பாலூட்டல் குறித்த ஆலோசனைகள் தாய்மார்களுக்கும் மற்றும் விரைவில் தாயாக இருக்கும் பெண்களுக்கும் பிரத்யேகமாகவும், மறைவாகவும் வழங்கப்படுகின்றன. அதிக அளவிலான மக்களுக்கு இந்த ஆலோசனை சேவை விரிவாக்கப்படுவது அவசியம். இது தொடர்பாக தாய்மார்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் உத்தரவாதம் மிக முக்கியமானது. மருத்துவர் வழங்கும் ஆலோசனையினால் பெண்கள் நம்பிக்கையையும், தைரியத்தையும் பெறுகிறார்கள்.

தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பான இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தும். தாய்ப்பால் ஊட்டுவது பற்றிய புரிதலும் மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் இக்கருத்தரங்கை நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்துவதற்காக காவேரி மருத்துவமனை மற்றும் ‘ஹேப்பி மாம்’ அமைப்பை மனமார பாராட்டுகிறேன். இதன்மூலம் இந்நாட்டின் சிறப்பான எதிர்காலத்திற்கு அடித்தளமாக இருக்கப்போகும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் நாம் உறுதிசெய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், ‘‘பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிறந்து விளங்கும் கொள்கைகள் மற்றும் கல்வித் திட்டங்களில் முதலீடு செய்வது பெண்களின் முன்னேற்றத்திற்கு அவசியம். இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் நடைமுறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். தாய்ப்பால் கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தலைமுறைக்கு பங்களிக்கும்’’ என்றார்.

The post உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு: காவேரி மருத்துவமனை நடத்தியது appeared first on Dinakaran.

Related Stories: