செல்போன் கடையில் திருடியவர் கைது

 

அவிநாசி, ஜூலை15: அவிநாசியை அடுத்துள்ள தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (26). இவர் தெக்கலூர் அவிநாசி மெயின் ரோட்டில் செல்போன் கடையை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கடையில் சர்வீஸ் செய்து வைத்திருந்த 14 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்போன் மற்றும் பணம் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் அமல் ஆரோக்கியதாஸ் தலைமையில் போலீசார் பாரூக், அஜித்குமார் ஆகியோர் குழுவினருடன் தனிப்படை அமைத்து, அவிநாசி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா பதிவை பார்த்த போது செல்போன் கடையில் திருடிய ஒருவரது அடையாளம் தெரிய வந்தது.

இதையடுத்து அவிநாசி அருகே நத்தக்காட்டு பிரிவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ஜெய கோவிந்தராஜ் (20) என்பதும் செல்போன் கடையில் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 செல்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் பறிமுதல் செய்தனர்.

The post செல்போன் கடையில் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: