செகந்திராபாத்தில் பரபரப்பு துணி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹1 கோடி மதிப்பு பொருட்கள் கருகியது

திருமலை : செகந்திராபாத்தில் உள்ள துணி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் பாலிகா பஜாரில் துணிக்கடை ஒன்று உள்ளது. இந்த துணிக்கடையில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை கடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஒரு அறையில் புகை வந்தது.

உடனே, தீ மெல்ல மெல்ல கடை முழுவதும் பரவியது. இதையறிந்த அங்கிருந்த பணியாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால், அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.இதுகுறித்து பணியாளர்கள் செகந்திராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும், செகந்திராபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘முதலில் துணி அருகே உள்ள ஆயுர்வேத மருந்து கடையில் இருந்து தீ பரவியது. அந்த தீ படிப்படியாக துணிக்கடைக்கு பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் ₹1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது’ என்றனர்.

The post செகந்திராபாத்தில் பரபரப்பு துணி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ₹1 கோடி மதிப்பு பொருட்கள் கருகியது appeared first on Dinakaran.

Related Stories: