ஆதனூர் ஊராட்சி திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், பலராமபுரம், லட்சுமிபுரம், கொருக்கந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆதனூர் ஊராட்சியில் திமுக மற்றும் தனியார் எலும்பு, கண் மருத்துவமனைகள் இணைந்து இலவச பொது மருத்துவம் மற்றும் சிறப்பு எலும்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது.

திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழமுதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மலர்விழிதமிழமுதன், துணை தலைவர் செல்விரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்துகொண்டு மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் சிறப்பு எலும்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

இதில், எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை, ரத்த அழுத்தம் பரிசோதனை, சீரற்ற ரத்த சர்க்கரை பரிசோதனை, இலவச மருத்துவ ஆலோசனை, பிசியோதெரபி ஆலோசனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர் கலந்துகொண்டனர்.

The post ஆதனூர் ஊராட்சி திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: