பெய்ஜிங்: அமெரிக்கா வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். சீனாவில் இருந்து கொரோனா பரவியதாக எழுந்த புகாரில் அமெரிக்கா, சீனா இடையேயான உரசல் அதிகரித்தது. உக்ரைன், ரஷ்யா போர் விவகாரத்தில் அமெரிக்கா உக்ரைனுக்கு பொருளாதார, நிதி உதவிகளை அளித்து வருகிறது. அதேசமயம் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா அமைதி காத்து வருகிறது. இந்தியா சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில் அமெரிக்கா இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. அமெரிக்காவில் சீனாவின் பலூன் உளவு பார்த்தது, தைவான், ஹாங்காங் விவகாரத்தில் சீனாவின் உரிமை மீறல்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு என அமெரிக்கா, சீனா இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா, சீனா இடையேயான பதற்றங்களை தணிக்கும் விதமாக அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் 2 நாள் அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ளார். ஆன்டனி பிளிங்கன் நேற்று காலை பெய்ஜிங்கை சென்றடைந்தார். தொடர்ந்து சீன வௌியுறவுத்துறை அமைச்சர் குயின் காங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமெரிக்கா, சீனா இடையேயான பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 2ம் நாளான இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
The post அதிகரித்து வரும் பதற்றங்களை தணிக்க முயற்சி அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் சீனா பயணம் appeared first on Dinakaran.