நாமக்கல் ஜூன் 12: எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.எலச்சிப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை, கலெக்டர் உமா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எலச்சிப்பாளையம் வேலகவுண்டம்பட்டி கிராமத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ₹28 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு, ₹7.43 லட்சம் மதிப்பீட்டில் சமையற்கூடம் கட்டும் பணியை கலெக்டர் உமா பார்வையிட்டார். அப்போது, பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கான கழிவறை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதை பார்வையிட்டார். பின்னர், கூத்தம்பூண்டி கிராமத்தில், அண்ணா நகர் அருந்ததியர் தெருவில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ₹2.40 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடு கட்டும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ₹9.41 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய பண்ணைக் குட்டை அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, எலச்சிப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து செயலர்களுடனான வளர்ச்சி பணிகள் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இதுவரை முடிவுற்ற பணிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில், திட்ட இயக்குநர் சிவக்குமார், பிடிஓ.,க்கள் அருளப்பன், மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
The post எலச்சிப்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.