ஷேர் ஆட்டோவில் பயணித்த ஐடி பெண் ஊழியரிடம் நகைபறித்த 3 பேர் கைது

மதுரை, ஜூன் 12: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ரபீனா பாத்திமா. இவர் மதுரை இலந்தைகுளத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் புணிபுரிந்து வருகிறார். இதற்காக, மதுரை வளர்நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக மதுரை – மேலூர் பைபாஸ்ரோடு, கருப்பசாமி கோயில் வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

அப்போது ஷேர் ஆட்டோவின் பின்சீட்டில் 25 மற்றும் 30 வயதுள்ள இரண்டு நபர்கள் பயணிகள் போல அமர்ந்திருந்தனர். அந்த ஆட்டோ சிறிது தூரம் சென்றதும் அதன் டிரைவர் திடீரென பின்னால் இருந்தவர்களிடம் இளம்பெண்ணின் நகைகளை பறிக்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து அவர்களும் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் மற்றும் இரண்டு மோதிரங்களை பறித்துள்ளனர். பின்னர் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து ரபீனா பாத்திமா மதுரை மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடத்தினர். முடிவில், இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை தெப்பக்குளத்தை சேர்ந்த அய்யனார், அவரது நண்பர்களாக கருப்பாயூரணியை சேர்ந்த ராஜபாண்டி, கல்லம்பலை சேர்ந்த பாஸ்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

The post ஷேர் ஆட்டோவில் பயணித்த ஐடி பெண் ஊழியரிடம் நகைபறித்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: