அனுமதி பெறாமல் விதிகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை: பதாகைகளும் வைக்க தடை; தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் விதிகளை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகள் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. மேலும், உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேபோல், உரிம காலம் முடிந்த பின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அகற்ற தவறினால், அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றி விடும்.

பின்பு, அதற்கான செலவினங்கள் அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது 3 வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும், உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வேண்டும்.
* விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகளால் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு அவர்கள் காயமடைந்தாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள்.

The post அனுமதி பெறாமல் விதிகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை: பதாகைகளும் வைக்க தடை; தமிழக அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: