அண்ணாமலையால நொந்துட்டோம் பிராமணர்களுக்கு தனிக்கட்சி: நடிகர் எஸ்.வி.சேகர் அறிவிப்பு

சென்னை: பாஜவில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக பாஜ பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு பிராமணர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக எச்.ராஜா, எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் புறக்கணிக்கப்பட்டனர். இவர்களில் கே.டி.ராகவன் மட்டும் மேலிட தொடர்பு இருப்பதால் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்து கட்சிப் பணிகளை செய்து வருகிறார்.

மற்ற 2 பேரும் ஒதுங்கியுள்ளனர். எல்.கணேசனும் ஓரங்கட்டப்பட்டிருந்தார். பின்னர் அவர் கவர்னராக நியமிக்கப்பட்டு விட்டார். அதோடு நடிகை காயத்திரி ரகுராமும் அதே காரணங்களுக்காக தூக்கி வீசப்பட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை அண்ணாமலை ஓரங்கட்டி வருகிறார். தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதும். ஆர்.எஸ்.எஸ்தான். அதில்தான் அவர்கள் அதிகமாக உள்ளனர். அண்ணாமலை தொடர்ந்து புறக்கணித்து வருவதால், பிராமணர்களுக்காக புதிய கட்சித் தொடங்க சிலர் முயன்று வருகின்றனர்.

இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் அளித்துள்ள பேட்டி: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது. அரசியல் அங்கீகாரத்தை பெறும் போது தான் சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து இந்த கட்சிகள் எல்லாம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிராமணர்களுக்காக தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பெயர், கொடி எல்லாம் கிடைத்தவுடன் புதிய கட்சி தொடங்கப்படும்.

பிராமணர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகவே இந்த புதிய கட்சி தொடங்கப்படுகிறது. சட்டசபையில் ஒரு பிராமணர் கூட எம்.எல்.ஏ. வாக இல்லை. பிராமணர்களின் புதிய கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அதில் பல்வேறு பிராமண சமுதாயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணைந்து செயல்பட உள்ளனர். அப்போது தான் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது தெரியவரும். அதே நேரத்தில் என்னை தலைமை தாங்குவதற்கு அழைத்தால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தி பலத்தை காட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் பிராமணர்கள் உள்ளனர். இவர்களில் அனைவருமே வசதியாண வாழ்க்கையை வாழவில்லை. பிராமணர்களிலும் தினக்கூலிகள் இருக்கிறார்கள்.

இது போன்ற பிராமணர்களின் நலனுக்காகவே புதிய கட்சி தொடங்கப்படுகிறது. மேடான பகுதிகளையும், பள்ளத்தையும் சரி செய்து சமமாக்குவதே சமூக நீதியாகும். ஆனால் அது போன்ற சமூகநீதி இங்கு இல்லை. ஆந்திரா,தெலங்கானா, கர்நாடகாவில் பிராமணர்கள் நலனுக்காக நலவாரியம் செயல்பட்டு வருகிறது. ஆனால் அது போன்று எந்த அமைப்பும் தமிழகத்தில் இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பிராமணர்களின் வாக்குவங்கி என்ன? என்பதை நிரூபித்து காட்ட உள்ளோம். பிராமணர்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்றும் நேரத்தில் பிரதமர் மோடியிடம் அது பற்றி எடுத்துச் சொல்லி விட்டு அதன் பிறகே பா.ஜவில் இருந்து வெளியேறுவேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வளர்க்க முற்படாமல் வீண் விளம்பரங்களை தான் செய்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

The post அண்ணாமலையால நொந்துட்டோம் பிராமணர்களுக்கு தனிக்கட்சி: நடிகர் எஸ்.வி.சேகர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: