மினி மீல்ஸ் வாழ்வை இனிதாக்கும் வாழைப்பூ!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய் களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவம் என்ற பெயரிலேயே மேலை நாடுகளில் சிகிச்சை தருகிறார்கள். பூக்களில் நாம் பலவற்றை அறிந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

அதில் வடை, பொரியல் போன்றவற்றை செய்து சாப்பிடதாவர்களும் இருக்க முடியாது. வாழைமரத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. முன்னோர்கள் பொதுவாக வாழையை பெண் தெய்வமாகவே வணங்கி வந்தனர். நாம் இன்றும் வாழையை ஒரு பாசிட்டிவ் மரமாக பாவித்து வருகிறோம். வாழையடி வாழையாக வாழ்க என்றே பலரை வாழ்த்துகிறோம். நமது வீட்டில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பந்தலின் வாசலில் குலையுடன் கூடிய வாழை மரங்களை கட்டி வைத்திருப்பார்கள்.

வாழையடி வாழையாக வாழ்க என்ற தத்துவத்தை விளக்கவே இவ்வாறு செய்வார்கள். வாழையின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.. வாழ்த்துவதற்கு மட்டுமல்ல. நோயின்றி வாழவும் வாழை சிறந்த பங்காற்றுகிறது. வாழையின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப்பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து கொள்வோம்.

இரத்தத்தைச் சுத்தப்படுத்த…

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்சிஸிஜனை உட்கிரகிப்பதுடன், தேவையான இரும்புச்சத்தையும் உட்கிரகிக்கிறது. இரத்த அழுத்தம், இரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு…

இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

வயிற்றுப்புண் நீங்க…

இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரிமானமின்மை உண்டாகி, வாயுச்சீற்றம் அதிகரித்து வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்தப் புண்களை ஆற்ற வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். அவ்வாறு செய்து வர வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

மூலநோயாளிகளுக்கு…

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப்பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப்புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு…

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

வாழைப்பூ கஷாயம்

வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொண்டு) அதனுடன் இஞ்சி 5 கிராம், பூண்டு 5 பல், நல்ல மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், கொத்தமல்லி விதை 1 ஸ்பூன், கறிவேப்பிலை 5 இணுக்கு. ஆகியவற்றை எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, மாதவிலக்கு காலங்களில், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைப்படுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும்.

புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளைப்படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். மலட்டுத்தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும். கை, கால்களில் உண்டாகும் பித்த எரிச்சலைக் குணப்படுத்தும். உடல் எரிச்சலைப் போக்கும். தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும். பருவ வயதினருக்கு உண்டாகும் சொப்ன ஸ்கலிதத்தை மாற்றும். நரம்புகளுக்கு வலுவூட்டும். குறிப்பாக மூளை நரம்புகளில் சூட்டைத் தணித்து மூளைக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இத்தகைய சிறப்பு மிகுந்த வாழைப்பூவை நாம் அனைவரும் சமைத்து உண்டு நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

The post மினி மீல்ஸ் வாழ்வை இனிதாக்கும் வாழைப்பூ! appeared first on Dinakaran.

Related Stories: