இந்தாண்டு கோடை சீசனில் ஊட்டியில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி

ஊட்டி: ஊட்டி படகு இல்லத்தில் இந்தாண்டு கோடை சீசனில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும். நடப்பாண்டு கோடை சீசனில் மட்டும் 8.50 லட்சம் பேர் வந்து சென்றனர். இந்நிலையில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையிலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 12க்கு தள்ளி போன நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை. தினசரி சுமார் 25 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர்.

வார விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். இதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைன்பாரஸ்ட், காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், படகு இல்லம் சென்று படகு சவாரி செய்ய தவறுவதில்லை. சுற்றுலா பயணிகள் வசதிக்காக மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகள் உள்ளன.

இவற்றை பயன்படுத்தி உற்சாகமாக படகு சவாரி செய்து, ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசிக்கின்றனர். இதேபோல் ஏரியின் மறுகரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்தில் இருந்தும் படகு சவாரி ெசய்கின்றனர். இதனிடையே கடந்தாண்டு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் படகு இல்லத்தில் சுமார் 5.50 லட்சம் பேர் படகு சவாரி செய்த நிலையில், இந்தாண்டு சுமார் 7 லட்சம் பேர் படகு சவாரி செய்துள்ளனர் என படகு இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post இந்தாண்டு கோடை சீசனில் ஊட்டியில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி appeared first on Dinakaran.

Related Stories: