சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று 2 தனி விமானங்களில் 404 பேர் ஹஜ் பயணம்: அமைச்சர் மஸ்தான் வழியனுப்பினார்

மீனம்பாக்கம்: உலகமெங்கும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக, ஒவ்வொரு இஸ்லாமியரும் சவூதி அரேபியா, ஜெட்டா நகரின் அருகிலுள்ள மதினா மெக்காவுக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தியாவில் இருந்து ஹஜ் புனிய பயணம் செல்பவர்களுக்கு, ஒன்றிய-மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்குகின்றன. அதோடு, அவர்கள் குறைந்த விமான கட்டணத்தில், பயணிக்க தனி சிறப்பு விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல், இந்த ஆண்டு சென்னையில் இருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு செல்லும் சிறப்பு விமானங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னையில் இருந்து இந்த சிறப்பு விமானங்கள் இன்று (7ம் தேதி) முதல் வரும் 21ம் தேதிவரை இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 4,169 இஸ்லாமிய யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இன்று காலை 11.20 மணியளவில் ஜெட்டா நகருக்கு முதல் தனி சிறப்பு விமானம் புறப்படுகிறது.

இதில் 254 ஹஜ் யாத்ரிகர்கள் பயணம் செய்கின்றனர். இதைத் தொடர்ந்து, 2வது சிறப்பு விமானம் மதியம் 12.10 மணியளவில் கிளம்புகிறது. இதில் 150 ஹஜ் யாத்ரிகர்கள் செல்கின்றனர். இவர்கள் ஹஜ் யாத்திரை முடிந்து, வரும் ஜூலை முதல் வாரத்தில் இதேபோல் தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புகின்றனர். சென்னையில் இன்று இந்த 2 தனி சிறப்பு விமானங்களில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இன்று காலை 7 மணியளவில் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் குவிந்துவிட்டனர். அவர்களிடம் ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் பாஸ்போர்ட் உள்பட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்து, உள்ளே அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, காலை 7.30 மணியளவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் வந்து, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து கூறி, வழியனுப்பி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மஸ்தான் கூறுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹10 கோடி மானியமாக அறிவித்துள்ளார். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. எதிர்க்கட்சி தலைவருக்கு வேறு செய்தி இல்லை என்பதால், இதுபோல் என்னை பற்றி பல்வேறு அவதூறுகள் பரப்பி வருகிறார்.

நான் இறைபக்தியுடன் வாழ்ந்து வருபவன். ஒரே தொகுதியில் நான் பலமுறை வெற்றி பெற்றிருக்கிறேன். நான் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தால், என்னை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். குற்றம் செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தவறுகள் யார் செய்தாலும், அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அவர்கள் இதுபோன்ற நடவடிக்கை எடுக்காததால்தான், தற்போது இத்தவறுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

The post சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று 2 தனி விமானங்களில் 404 பேர் ஹஜ் பயணம்: அமைச்சர் மஸ்தான் வழியனுப்பினார் appeared first on Dinakaran.

Related Stories: