திருமலை: போலவரம் அணை கட்டுமான பணிக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய போலவரம் அணை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அணையின் கட்டுமான பணிகளை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன் மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதற்காக ஹெலிகாப்டரில் ஏரியல் பணிகளை, ஏரியல் சர்வே செய்தபடி ஏலூர் மாவட்டம் போலவரத்திற்குச் சென்றார்.
அப்போது, அங்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த போலவரம் பணி முன்னேற்றம் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் கட்டுமான பணிகள் குறித்த விவரங்களை முதல்வர் ஜெகன் மோகனிடம் அதிகாரிகள் விளக்கி கூறினர். இந்நிலையில், அணை கட்டுமானத்திற்காக 2013-14ம் ஆண்டு போலவரம் முதல் கட்ட பணிக்கு மத்திய அரசு ரூ.12,911 கோடி வழங்கியது. ஆனால் அணையின் கட்டுமான பணி பாதியில் நின்று, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதால், சமீபத்திய விலையின் அடிப்படையில் அரசு நிதி ஒதுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை, மாநில அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாக கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.10,000 கோடி கூடுதலாக ஒதுக்கி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உதவுமாறு முதல்வர் ஜெகன்மோகன் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு பிரதமர் மோடி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் அதற்கான நிதியை வழங்க நீர்மின் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post போலவரம் அணை கட்டுமானத்துக்கு ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு appeared first on Dinakaran.