சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ‘நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்’ என்ற மையக்கருத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ம் நாள் உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள் என்ற மையக்கருத்தில் உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன், கும்மிடிப்பூண்டி திருமூர்த்தி ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். முதலாவதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘நெகிழி மாசுபாட்டிற்கான தீர்வுகள்’ என்ற தலைப்பில் கலெக்டர் தலைமையில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும், சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த தொழிற்சாலையின் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள காணொலி திரையை கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும், மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

காமராஜர் சிலை வரை நடைபெற்ற பேரணியில் சுற்றுச்சூழல் துறை அலுவலர்கள், பல்வேறு தொழிற் நிறுவனங்களின் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் மஞ்சப்பையுடன், மரக்கன்றுகளை கலெக்டர் இலவசமாக வழங்கினார்.

தொடர்ந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பட்டாபிராம் பகுதியில் உள்ள தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கல்லூரியின் செயலாளர் வெங்கடேச பெருமாள், இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோரிடம் ரூ.1 லட்சம் காசோலையையும், சான்றிதழையும் கலெக்டர் வழங்கினார். இதேபோல் துவக்கம் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் காசோலையும், சான்றிதழையும் வழங்கினார்.

The post சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: