வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம்: தங்க தாலி, சீர்வரிசை வழங்கப்பட்டது

அம்பத்தூர்: இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வில்லிவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சார்பில் 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்படியும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர்கள், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2023 – 24ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், திருக்கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கிராம் தங்க தாலி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்தும் விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கடந்த 27.04.2023 அன்று சென்னை கோயம்பேடு, அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளி இணைகளுக்கு 4 கிராம் பொன் தாலியுடன் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 2 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, 4 கிராம் பொன் தாலி மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதுவரை 100 மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருக்கோயில்கள் மூலம் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, கொளத்தூர் துணை ஆணையர் சக்திவேல், காவல் துறை உதவி ஆணையர் ராகவேந்திரன் ரவி, மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் சாவித்ரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவர் சிம்மசந்திரன், திருக்கோயில் செயல் அலுவலர்கள் குமரேசன், பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு மாற்றுத்திறனாளி இணைகளுக்கு திருமணம்: தங்க தாலி, சீர்வரிசை வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: