சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு

சென்னை: தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மைய விரிவாக்கப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை வர்த்தக மையத்தில் 10,560 சதுரமீட்டர் பரப்பளவில் மூன்று பொருட்காட்சி அரங்கங்களும், 2000 நபர்கள் அமரக்கூடிய மாநாட்டு அரங்கமும் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டத்தில் 83,745 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ.309 கோடி மதிப்பீட்டில் 4000 பேர் அமரக்கூடிய மாநாட்டு அரங்கம் மற்றும் ஐந்து பொருட்காட்சி அரங்கங்கள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 1,308 கார்கள் நிறுத்தக்கூடிய வசதி கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்தமும் கட்டபட்டு வருகிறது.

இந்த கட்டுமானப் பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று பார்வையிட்டார். இக்கட்டுமானப்பணிகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக முழுவதுமாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் கிருஷ்ணன், டிட்கோ மேலாண்மை இயக்குநர் ஜெய முரளிதரன், தொழில் வழிகாட்டி மேலாண் இயக்குநர், தலைமைச்செயல் அலுவலர் விஷ்ணு, செயல் இயக்குநர் ஜெயசந்திர பானு ரெட்டி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post சென்னை வர்த்தக மைய விரிவாக்க பணி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: