செல்போன் திருடிய 3 பேர் கைது

 

கோவை, ஜூன் 5: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்தவர் மாதேஷ் (23). இவர் கோவை பெரியகடைவீதி தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள வாழை இலைக்கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் இரவில் தான் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அறைக்குள் நுழைந்த 2 பேர் அவரது செல்போனை திருடி தப்பிச் செல்ல முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த மாதேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இருவரையும் பிடித்து பெரியகடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போன் திருடியது கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான விஷ்ணு (22), கெம்பட்டி காலனி திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஜித்குமார் (20) என தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் முகமத் ஹனீபா (42). இவர் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் ஸ்டாப் அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்தார். அவர் தனது செல்போனை பைக் டேங்க் கவரில் வைத்திருந்தார். அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் செல்போனை திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றார். முகமத் ஹனீபா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் செல்போன் திருடியது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சந்தோஷ் சிவா (29) என தெரியவந்தது. இதையடுத்து இவரை போலீசார் கைது செய்தனர்.

The post செல்போன் திருடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: