தந்தை அடித்து கொலை மகன் அதிரடி கைது

கடலூர்: தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏ.சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (65). திருமண புரோக்கர். இவருக்கு மாலா (60) என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ரங்கசாமி தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார். திருமணமாகாத மகன் குணா(24) அதேஊரில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாலா கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது மகன் குணாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது மகனுடன் விருத்தாசலத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். ரங்கசாமி மட்டும் ஏ.சித்தூரில் தனியாக வசித்து வந்தார். தன்னுடன் இருந்த மனைவியை அழைத்து சென்று குணா தனியாக வசித்து வந்ததால் அவர் மீது ரங்கசாமி கடும் கோபத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் உர தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த குணா சிறுநீர் கழிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ரெங்கசாமி தனது மகனிடம் தகராறு செய்ததுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணாவை குத்த முயன்றார். இதில் சுதாகரித்துக் கொண்ட குணா ஆத்திரத்தில் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ரங்கசாமியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ரங்கசாமி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிந்து, குணாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். குடும்ப தகராறில் தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தந்தை அடித்து கொலை மகன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: