முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்

நெய்வேலி, ஜூன் 3: என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கும் பேரணி வட்டம்-8 பெரியார் சதுக்கம் ஸ்டோர் ரோடு சந்திப்பில் நடைபெற்றது. பேரணிக்கு என்எல்சி ஜீவா ஒப்பந்த சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் ராமமூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க சிறப்பு செயலாளர் சேகர் கலந்து கொண்டு பேசுகையில், என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து பத்து ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. வீடு, நிலம் கொடுத்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.

மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வரும் 14ம் தேதிக்குள் என்எல்சி நிறுவனம் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், 15ம் தேதி நெய்வேலி மெயின் பஜாரில் நடைபெறும் கூட்டத்தில் வேலை நிறுத்த அறிவிப்பு தேதி அறிவிக்கப்படும், என்றார். தொடர்ந்து நெய்வேலி பெரியார் சதுக்கத்தில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: