கோயில் நிகழ்ச்சிகளில் ஆபாச ஆடையில் ஆடல், பாடல் கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய 7 நாளில் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை:
கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு கோயில் விழா குழுவால் மனு அளிக்கப்பட்டால் மனுவின் மீதான முடிவு ஏழு நாளுக்குள் விழாக் குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கவோ, அனுமதி மறுக்கவோ முடிவு செய்தால், எட்டாம் நாள் விழாக்குழு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம். அத்தகைய அனுமதியின் பேரில், விழாக் குழுவின் பொறுப்பான உறுப்பினர்களாக இருக்கும் அமைப்பாளர்கள், திருவிழாவிற்குச் சம்பந்தப்பட்ட கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுவதையும், ஆபாசமான காட்சிகள், நடனம் எதுவும் இல்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்கக்கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும்பெண் கலைஞர்களின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் இழுக்கு ஏற்படும் வகையில் அவர்களை ஆபாசஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது. கோயில்களில் இறை வழிபாட்டிற்காக இசைக்கப்படும் பாடல்கள் இரட்டை அர்த்தப் பாடல்கள் இதுபோன்ற நிகழ்ச்சியில் இடம் பெறக்கூடாது. ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மது அல்லது போதைப் பொருள் எதுவும் விநியோகிக்கப்படக் கூடாது. நிபந்தனைகள் ஏதேனும் மீறப்பட்டால் நிகழ்ச்சி அமைப்பாளர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரிகள், விழா குழுவினர் மேல் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.இந்த வழிகாட்டுதல்கள் குறித்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்களின் கீழ் உள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய ஏழு நாள்களுக்குள் அனுமதி வழங்கி, விதிமுறைகளை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கோயில் நிகழ்ச்சிகளில் ஆபாச ஆடையில் ஆடல், பாடல் கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: