சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் ரூ. 3,233 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகன; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது’ என்று சென்னை திரும்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

சிங்கப்பூர், ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழ்நாட்டிற்கும், ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதாரம், தொழில் ரீதியாக நல்லுறவை பெறக்கூடிய வகையில் இந்த பயணம் அமைந்தது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டமான மெட்ரோ ரயில் திட்டம், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தியுள்ளோம் என்றால் அதில் ஜப்பானின் பங்கும் உள்ளது. உற்பத்தி துறையில் உலகத்திற்கே முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு, அதேநேரத்தில் ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள், இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஜப்பான் நாட்டிற்கு சென்று ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்.

அந்தவகையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை அதிகாரிகள் முனைப்போடு செயல்பட்டு பல ஜப்பான் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய திட்டமாக ரூ.1891 கோடி முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனது முன்னிலையில் ைகயெழுத்திடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐபி நிறுவனம் ரூ.312 கோடி, டைசல் நிறுவனம் ரூ.83 கோடி, கியூகோ கிட்ட நிறுவனம் ரூ.113.09 கோடி உட்பட மொத்தம் ரூ.3233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கும், தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் அடுத்த கட்ட தொழில்வளர்ச்சி மேம்பாட்டிற்கு இந்த தொழிற்சாலைகள் தூண்டுகோலாக இருக்கும். சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் பல்வேறு முன்னனி தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்தேன். இந்தியாவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று எடுத்துக் கூறினேன். இந்த சந்திப்பின் போது மேலும் பல முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள சிங்கப்பூர், ஜப்பான் நாட்டில் உள்ள நிறுவனங்கள் மிகவும் முனைப்போடு இருப்பதாக தெரிய வந்தது. இந்த நிறுவனங்களின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்ெகாள்ள வேண்டும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு வலியுறுத்தி உள்ளேன்.

வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 10, 11ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளேன். இந்த அழைப்பினை ஏற்று பல தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளன. எனவே இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தில் ரூ. 3,233 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகன; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: