மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி ரயில் முன் பாய்ந்து கல்லூரி அதிபர் தற்கொலை: மதுரை அருகே பரபரப்பு

மதுரை: கோவையைச் சேர்ந்த கல்லூரி அதிபர், வாட்ஸ் அப்பில் தம்பிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மதுரை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், குருடம்பாளையத்தில் உள்ள வடமதுரை நால்வர் நகரைச் சேர்ந்தவர் பாலன் நாயர் மகன் சுபாகிருஷ்ணன் (34). இவர், கோவையில் சொந்தமாக பி.எட் கல்லூரி நடத்தி வந்தார். இவருக்கும், மதுரை அண்ணாநகர் வடக்கு குறுக்குத்தெருவை சேர்ந்த சண்முகப்பிரியா (32) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர்.

ஓராண்டுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். சுபாகிருஷ்ணன் கோவையிலும், சண்முகப்பிரியா மதுரையில் பெற்றோர் வீட்டிலும் தங்கி வந்தார். இவர்கள் இடையேயான விவாகரத்து வழக்கு, மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சுபாகிருஷ்ணன் நேற்று மதுரை வந்தார். நீதிமன்றம் வந்த அவர், மதுரையில் தங்கியிருந்தார்.

நேற்று நள்ளிரவில் தனது தம்பி மதன்குமாருக்கு வாட்ஸ் அப் வீடியோகால் செய்து, ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. எல்லோரையும் கஷ்டப்படுத்தி விட்டேன். எனது சாவுக்கு யாரும் காரணமில்லை’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை அருகே, சமயநல்லூர்-கூடல்நகர் இடையே சென்னையிலிருந்து வந்த தேஜஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், சுபாகிருஷ்ணன் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சுபாகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி ரயில் முன் பாய்ந்து கல்லூரி அதிபர் தற்கொலை: மதுரை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: