சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்ம பெருமாள் கோயில் தேர் திருவிழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில், பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமை கோயில். மலையை குடைந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, பாடலாத்ரி நரசிம்மர் பெருமாள் கோயில் என, இது அழைக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவம் 10 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த வைபவங்களும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு வைகாசி உற்சவ திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் நரசிம்ம பெருமாள் அமர்ந்து வீதி உலாவாக வந்து பக்தர்கர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக 8ம் நாளான நேற்று தேர் திருவிழா நடந்தது.

நரசிம்மர், அகோபிலவள்ளி தாயார் சமேதமாக தேரில் எழுந்தருளி வீதி உலா சென்றார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் வீதியுலா வந்தது. பக்தர்கள், தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். வீதியுலாவை தொடர்ந்து மீண்டும் தேர், நிலைக்கு வந்தது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளின் ஆசியினை பெற்று மகிழ்ந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

The post சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்ம பெருமாள் கோயில் தேர் திருவிழா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: