நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

நெல்லை: நாங்குநேரி அருகே நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி இரும்பு கம்பியால் தாக்கி ரூ 1.5 கோடி கொள்ளை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (40). இவர் நெல்லையில் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் 2 உதவியாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது நெல்லையிலிருந்து இவரது காரை தொடர்ந்து முன்னும் பின்னும் இரண்டு கார்கள் வந்துள்ளன.

நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் வரும் போது திடீரென இரு கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சுஷாந்தின் காரை வழி மறித்து நிறுத்தி அவர் மீது மிளகாய் பொடியை வீசி கம்பியால் தாக்கியது. அதனைத் தொடர்ந்து காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த 1.5 கோடி ரூபாயை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். கம்பியால் தாக்கியதில் வலி தாங்காமல் சுஷாந்த் அலறவே, அவரது அலறல் சத்தம் கேட்டு அப்போது அவ்வழியே வந்த தனியார் ஆம்னி பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சிலிருந்து டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் இறங்கி கொள்ளையர்களை நோக்கி வந்துள்ளனர்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள் டிரைவர் மற்றும் 2 உதவியாளர்களை அடித்து விரட்டி விட்டு சுஷாந்தை மட்டும் தாங்கள் வந்த காரில் தூக்கிப்போட்டு அவரது காரையும் கடத்தி சென்று விட்டனர். சிறிது தொலைவு வந்ததும் சுஷாந்தை நடுவழியில் இறக்கி விட்ட அந்த கும்பல் நாகர்கோவில் நோக்கி காரை ஓட்டி சென்றுள்ளது. தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள் சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி கடத்தல் கும்பல் காருடன் சென்றுள்ளது. அங்குள்ள குளத்தின் கரையோரம் சுஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணக்கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றிய கொள்ளை கும்பல் சுஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கொள்ளையர்கள் தாக்குதல் காயமடைந்த சுஷாந்த் பயத்தில் நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்த பின் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுஷாந்திடம் விசாரணை நடத்தினர்.. அதில் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவிப்பதால் அது ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துணிகர முகமூடி கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: