சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்பு: ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்று பதவியேற்கிறார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அதனை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.துரைசாமி ஓய்வு பெற்றார். இதையடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பொறுப்பு தலைமை நீதிபதியாக சுமார் 8 மாதங்கள் பணியாற்றிய டி.ராஜா கடந்த 24ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1962ம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2010ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார். இதையடுத்து, இன்று காலை புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.

The post சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்பு: ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: