வைரலோ வைரல்

இது இந்தியா!

பஞ்சாப் பொற்கோவிலில் ஒரு பெண் முகத்தில் தேசியக் கொடி வரைந்திருந்த காரணத்தால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் முழுக்க எங்கும் வைரலில் இருந்தார் அந்த இந்தியப் பெண். பஞ்சாப் பொற்கோவிலில் இளம்பெண் ஒருவர் தனது கன்னத்தில் தேசியக் கொடியை வண்ணங்களால் பூசியபடி சென்றிருக்கிறார். இதனைக் கண்ட கோவில் வாயில் பணியாளர், அப்பெண்ணின் கன்னத்தில் இருக்கும் தேசியக் கொடி பெயின்டிங்கைக் காட்டி இதனுடன் உள்ளே நுழையக் கூடாது என்றார். இதற்கு அப்பெண் இது இந்தியாதானே இங்கே இந்தியக் கொடியுடன் கோவிலுக்குள் செல்லக்கூடாது என எப்படி சொல்வீர்கள்? எனக் கேட்டிருக்கிறார். அதற்கு கோவில் பணியாளர் இது இந்தியா அல்ல, பஞ்சாப்’ எனச் சொல்ல ‘பஞ்சாப், மற்றும் இந்தக் கோவில், இந்தியாவில்தானே உள்ளது எனக் கேட்க பிரச்னையாக வெடித்துள்ளது. இதனால் அப்பெண்ணுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனை அப்பெண்ணுடன் இருந்த நண்பர் வீடியோவாகப் பதிந்து சமூக வலைத்தளங்களில் பகிர அப்பெண்ணுக்கு நாடு முழுக்க ஆதரவு பெருகத் துவங்கியுள்ளது.

பூனைக்குட்டிக்கு உதவும் குரங்கு!

கடந்த சில வாரங்களாகவே பலரின் மனங்களையும் நெகிழச்செய்து அதே சமயம் கோபமடையவும் செய்திருக்கிறது ஒரு வைரல் வீடியோ. பூனைக்குட்டி ஒன்று சேறும், சகதியும் நிறைந்த தொட்டிக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வராமல் போராடிக்கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்த ஒரு குரங்கு சற்றும் யோசிக்காமல் தொட்டிக்குள் இறங்கி அந்தப் பூனைக்குட்டியைத் தூக்க பலவாறு முயற்சி செய்கிறது. ஆனால் அதனால் முடியாமல் போகவே மற்றொரு குரங்கையும் உதவிக்கு அழைத்து வருகிறது. அந்தக் குரங்காலும் முடியாத கட்டத்தில் ஒரு சிறுமி வந்து பூனையைத் தூக்குகிறார்.  குரங்கின் இந்தச் செயல் பலரையும் நெகிழச் செய்தாலும், இத்தனையையும் பார்த்துக்கொண்டு ஒருவர் அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறாரே என கோபமும் ஏற்படுத்தியுள்ளது. அல்லது இந்த வீடியோவிற்காகத்தான் அந்தப் பூனையைத் தொட்டிக்குள் போட்டார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. வைரலுக்கும், லைக்குகளுக்கும் ஆசைப்பட்டு இப்படி விலங்குகளை துன்புறுத்தாதீர்கள் எனவும் பலரும் கோபமுடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து குரங்குக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

The post வைரலோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: