திரிசூலம் திருசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான 62 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை அளக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து நவம்பர் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திரிசூலத்தில் உள்ள திரிசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சேவியர் பெலிக்ஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயிலுக்கு சொந்தமான 83.26 ஏக்கர் நிலத்தில், 21 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கான வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் மீதமுள்ள 62 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். அரசு தரப்பின் இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், எந்த அடிப்படையில் கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன என்பது குறித்தும், ஆறு வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முறையான அறிக்கையை தாக்கல் செய்ய ஏதுவாக, நிலத்தை அளவீடு செய்வதற்காக வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து அனைத்து ஒத்துழைப்பையும் மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post திரிசூலம் திருசூலநாதர் கோயிலுக்கு சொந்தமான 62 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை அளக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: