குமரகுரு கல்லூரியில் இளைய தொழில் முனைவோர் மாநாடு

கோவை, மே 26: கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள், யங்இந்தியன்ஸ் கோவை கிளை சார்பில் ‘வை-20’ என்ற கருத்தரங்கு குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக இளைய தொழில் முனைவோர்களின் மாநாடு நடந்தது. இந்த கருத்தரங்கின் மூலமாக பல்வேறு கருத்து பரிமாற்றம் ஏற்பட்டு அதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்பட்டன. இக்கருத்தரங்கம் இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி செல்லும் மாணவர்களிடையே அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளோடு உரையாட ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த கருத்தரங்கம் அரசாங்கத்தின் எதிர்காலம் மற்றும் ஆட்சி முறையை வடிவமைத்தல் செய்வது மற்றும் தொழில்முனைவின் எதிர்காலம் என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.

இதில், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி பங்கேற்று பேசுகையில், ‘‘கோவையில் ஏற்கனவே இரண்டு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்திருக்கும் நிலையில், இன்னொரு தகவல் தொழில்நுட்ப பூங்கா நிர்வாகத்திற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது மூலமாக கோவை ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் ஏற்படும் வேலை வாய்ப்புகளை பயன்படுத்துவதற்காக மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், அரசு தொழில்முனைவோருக்கான நீட்ஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தொழில்முனைவோர் 5 கோடி வரையிலான நிதி உதவியை தங்களின் தொழிலை துவங்குவதற்காக பெற்றுக்கொள்ளலாம். இதில், 25 சதவீதம் மானியமாகவும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை கல்லூரி பயிலும் மாணவர்கள் தங்கள் புதுமையான தொழில்திட்டங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்’’ என்றார். கருத்தரங்கில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செயற்கை நுண்ணறிவு மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் பல்வேறு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக கூறினார். கோவை மாநகர கமிஷனர் பிரதாப், திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

The post குமரகுரு கல்லூரியில் இளைய தொழில் முனைவோர் மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: