திண்டிவனம் அருகே பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது

 

திண்டிவனம், மே 22: திண்டிவனம் அருகே வயல்வெளி பகுதியில் அரிய வகை பறவைகளை வேட்டையாடிய மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர், 20 அரிய வகை பறவைகள் உள்ளிட்ட 30 பறவைகள், பைக், இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்கு உட்பட்ட உப்புவேலூர் கிராமம், சிவன் கோயில் அருகே வயல்வெளி பகுதியில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாக வந்த தகவலின்பேரில் வனத்துறையினர் நேற்று அங்கு வந்தனர்.

இவர்களை பார்த்ததும், பறவை வேட்டைக்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்ததில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் நரிக்குறவர்கள் கவுதம்(22), சூர்யா(24), சரவணன்(31) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து அரிய வகை பறவைகள் 20 மற்றும் உள்நாட்டு பறவைகள் 10 என 30 பறவைகள், இரண்டு நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் திண்டிவனம் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து, விசாரணைக்கு பின், வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post திண்டிவனம் அருகே பறவைகளை வேட்டையாடிய 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: