6 வயது சிறுமியின் கண்களில் இருந்து முடி, நகம், கழிவு வெளியேறும் வினோதம்; சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை

திருமலை: கூலித்தொழிலாளியின் மகளான 6வயது சிறுமியின் கண்களில் இருந்து முடி, நகம் உள்ளிட்ட கழிவுகள் வெளியேறும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் ராஜோலு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்ரு. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கூலிவேலை செய்யும் தஸ்ரு, போதிய வருமானம் இல்லாததால் இளைய மகள் சவுஜன்யாவை(6), பெத்தகிஷ்டபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒருநாள் சவுஜன்யா கண் வலிப்பதாக தனது பாட்டியிடம் கூறியுள்ளார். அப்போது அவரது பாட்டி பார்த்தபோது சவுஜன்யாவின் வலது கண்ணிலிருந்து விசித்திரமான கழிவுகள் வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, சவுஜன்யாவை அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சைக்கு அதிகம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். அவ்வளவு பணம் தன்னால் செலவு செய்ய முடியாது என்று கூறிய தஸ்ரு மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சிறுமியின் கண்களில் இருந்து பருத்தி உருண்டைகள், எறும்புகள், முடி, அரிசி தானியங்கள், நகங்கள், காகித துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வெளியே வந்துகொண்டே இருக்கிறதாம். இவ்வாறு கழிவுகள் வரும்போது கண்ணில் கடுமையான வலி இருப்பதாக சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுகிறார். இந்நிலையில் இதையறிந்த அப்பகுதியினர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராம மக்களும் வந்து பார்த்து செல்கின்றனர்.

கூலித்தொழிலாளின் மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை சரி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுமியின் கண்களில் இவ்வாறு கழிவுகள் வெளியேறுவது ஏன், இதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. சவுஜன்யாவை முதலில் பரிசோதித்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள், அவரின் வியாதி குறித்து என்ன கூறினார்கள் என்றும் பெற்றோருக்கு சொல்லத் தெரியவில்லை.

The post 6 வயது சிறுமியின் கண்களில் இருந்து முடி, நகம், கழிவு வெளியேறும் வினோதம்; சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: