பஞ்சாப்பின் குருத்வாரா ஏரி அருகே மது அருந்திய பெண் சுட்டுக் கொலை

பாட்டியாலா: பஞ்சாப் குருத்வாரா ஏரி அருகே மது அருந்திக் கொண்டிருந்த பெண்ணை, துக்னிவரன் சாஹிப் ஊழியர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா துக்னிவரன் சாஹிப் ஏரி அருகே பர்மிந்தர் கவுர் என்ற பெண் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். இதையறிந்த துக்னிவரன் சாஹிப் ஊழியர் ஒருவர் அந்த பெண்ணிடம், ‘ஏரி அருகே அமர்ந்து மது அருந்த கூடாது’ என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை ஏற்க மறுத்த அந்த பெண், அந்த ஊழியரிடம் வாக்குவாதம் செய்தார். அதன்பின் அந்தப் பெண்ணை, தனது மேனேஜரிடம் அழைத்து சென்றார்.

அவரும் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறினார். ஆனால் அந்தப் பெண் யாருடைய பேச்சையும் கேட்கத் தயாராக இல்லை. ஏரி அருகே அமர்ந்து தான் மது அருந்துவேன் என்று அடம்பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர், தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை நோக்கி சுட்டார். அதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் இறந்தார். மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது மற்றொரு ஊழியரும் காயமடைந்துள்ளார். அவருக்கும் குண்டு பாய்ந்துள்ளதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஊழியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பஞ்சாப்பின் குருத்வாரா ஏரி அருகே மது அருந்திய பெண் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Related Stories: