சுங்கச்சாவடி அமைக்க கையகப்படுத்திய நில வழிகாட்டி மதிப்பை அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகாவில் உள்ள சென்ன சமுத்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், சுங்கச்சாவடி அமைக்க 2018ம் ஆண்டு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் கடந்தும் நிலத்தை பயன்படுத்தாமல் உள்ளதால், நிலத்தை பயன்படுத்த தங்களுக்கு அனுமதி மறுத்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கக் கோரி நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், குறிப்பிட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டை மோசடியாக பத்து மடங்கு அதிகரித்து காட்டியதால் சுங்கச்சாவடி அமைக்க 500 கோடி ரூபாய் செலவாகும். எனவே, நிலத்தை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க உள்ளோம். அதனால் நிலம் கையகப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய ஆட்சேபம் இல்லை என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நிலம் கையகப்படுத்த 2018ம் ஆண்டு பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. நிலத்தை உரிமையாளர்களிடம் இரண்டு வாரங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, வழிகாட்டி மதிப்பீட்டை பத்து மடங்கு அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது என்று உத்தரவிட்டனர்.

The post சுங்கச்சாவடி அமைக்க கையகப்படுத்திய நில வழிகாட்டி மதிப்பை அதிகரித்து காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: