எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகாவில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழர் பகுதியில் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தற்போது, தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜ கூட்டணியில் இருப்பதால், டெல்லி பாஜ தலைவர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை டெல்லி மேலிடத்தில் புகார் செய்தார். இதையடுத்து அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி வாபஸ் வாங்கிக் கொண்டாலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என்று பகிரங்கமாக கூறவில்லை.
அதேபோன்று எடப்பாடி பழனிசாமியும் கர்நாடகாவுக்கு சென்று பாஜ கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவில்லை. இந்த நிலையில்தான் இன்று தேர்தல் முடிவு வெளியாகி உள்ளது. இதில் பாஜ தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தாலோ அல்லது பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்திருந்தாலோ அங்குள்ள தமிழர்கள் பாஜவுக்கு வாக்களித்திருப்பார்கள். பாஜவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கர்நாடகாவில் பாஜக தோல்விக்கு அதிமுகவும் ஒரு காரணம் என்று அவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் அதிமுக தலைவர்கள் மீது அமித்ஷாவும் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது.
The post கர்நாடகா சட்டமன்ற பொதுத்தேர்தல்: பாஜகவை தோற்கடித்த அதிமுக.! தொண்டர்கள் குமுறல் appeared first on Dinakaran.