சித்ரா பவுர்ணமி விழா ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி: நம்பெருமாள் வழிநடை புறப்பாடு

திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மா மண்டபத்தில் இன்று மாலை கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் அம்மா மண்டபத்துக்கு வழிநடை உபயமாக புறப்பட்டார். திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான வெளிக்கோடை திருநாள் கடந்த 25ம் தேதி மாலை தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது. உள்கோடை திருநாள் கடந்த 30ம் தேதி தொடங்கியது. நேற்று மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு மாலை 6.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இத்துடன் கோடை திருவிழா நிறைவு பெற்றது. இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி இன்று(5ம் தேதி) கஜேந்திர மோட்ச புறப்பாடு நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடைந்தார். அங்கு நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார்.
தொடர்ந்து மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

The post சித்ரா பவுர்ணமி விழா ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி: நம்பெருமாள் வழிநடை புறப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: