3ம் ஆண்டு மாணவர்களுக்கு வருமானம் ஈட்டும் திட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உளுந்து விதைப்பு விழா

செய்துங்கநல்லூர், மே 4: கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உளுந்து விதைப்பு விழா கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்தது.உளுந்து விதை விதைத்தல் விழா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒவ்வொரு வருடமும் 3ம்ஆண்டு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பாடநெறி கையாளப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விதை உற்பத்தியில் உளுந்து விதை விதைத்தல் விழா நடந்தது.

2023ம் ஆண்டிற்கான இளநிலை 3ம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கு படிக்கும் போதே வருமானம் ஈட்டுதல் என்ற திட்டத்தில் பயிர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் படிப்பினை ஐந்தாவது பருவத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவ மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனியாக 5 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது, அதில் பயிர் சாகுபடி தொழில் நுட்பங்களான விதை தேர்வு, விதை நேர்த்தி செய்தல், வயல் தயார் செய்தல், வரப்பு அமைத்தல், விதைத்தல் போன்றவைகளுடன் பயிருக்கு தேவையான உரம், நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை மாணவ மாணவிகளே செய்து தெரிந்து கொண்டனர்.

விதை நேர்த்தி செய்யப்பட்ட உளுந்து கேகேஎம்-1 ரக விதைகள் விதைக்கும் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் தேரடி மணி தலைமை வகித்து உளுந்து விதைப்பை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சோலை மணி வரவேற்றார்.தொடர்ந்து விதைகள் விதைக்கும் விழாவில் பண்ணை கண்காணிப்பாளர் ஜோசப், பண்ணை மேலாளர் மற்றும் பாட ஆசிரியர் சுப்புலட்சுமி உளுந்து சாகுபடி தொழில் நுட்பங்களை பற்றி மாணவர்களுக்கு விளக்க உரை அளித்தனர்.விழாவில் உதவி வேளாண்மை அலுவலர்கள், இதர இளநிலை பயிலும் மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வருமானம் ஈட்டும் திட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் உளுந்து விதைப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: