பி.ஆர்.பாண்டியனுக்கு எதிராக விவசாயிகள் பரபரப்பு புகார்

சிதம்பரம், ஏப். 28: அரசுக்கு விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை விடுப்பது தவறான முன் உதாரணமாகும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து விவசாயிகளுக்கான அரசாக திகழ்கிறது. இந்த அரசு விவசாயிகளுடைய வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அரசு மீதும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாவிடில், விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். எச்சரிக்கை விடுவது தவறான முன் உதாரணமாகும். அதை வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகளுக்கும், அரசுக்கும் பாலமாக விவசாய சங்கங்கள் செயல்பட வேண்டும்.

ஆனால் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஏதோ எதிரியை போன்று அரசை குறை சொல்லி செயல்பட்டு கொண்டிருக்கிறார். பி.ஆர்.பாண்டியன் விவசாயிகள் நலனின் அக்கறை செலுத்த வேண்டும். எதற்கொடுத்தாலும் அரசுக்கு எதிராக குற்றம் சாட்டுவது நல்ல அணுகுமுறை இல்லை. அவருக்கு பின்னால் இருந்து யாரோ இயக்குவதுபோல் தெரிகிறது. இதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார். பேட்டியின்போது கூட்டமைப்பு நிர்வாகிகள் பேரூர் குஞ்சிதபாதம், கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், செல்வக்குமார், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post பி.ஆர்.பாண்டியனுக்கு எதிராக விவசாயிகள் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: