கம்பியில் துணி காய வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மனைவி, காப்பாற்ற முயன்ற கணவன் பலி

திருமலை : தெலங்கானாவில் கம்பியில் துணியை காய வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் லினேகட்டா காலனியை சேர்ந்தவர் பொல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ்(44). இவரது மனைவி சசிதேவி(38). இவர்களுக்கு இன்டர்மிடியட் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் சரண்ராஜ், பவன்தேஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று வழக்கம்போல் சசிதேவி காலையில் எழுந்தவுடன் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீட்டின் முன் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தார்.

இந்நிலையில், இரவு ஏற்பட்ட சூறைக்காற்றால் கம்பியில் காய வைத்திருந்த துணிகள் கீழே விழுந்திருந்தது. அதனை எடுத்து மீண்டும் அந்த கம்பியில் காய வைக்க முயன்றார். ஆனால், அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது தெரியாததால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பக்கத்திலிருந்த கார் மீது விழுந்தார். அதைப்பார்த்த கணவர் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரும் மின்சாரம் தாக்கியதால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கு காரணம் வீட்டின் முன்புறம் வெளிச்சத்திற்காக சுவரில் கரண்ட் பல்ப் பொருத்தப்பட்டிருந்தது. பல்ப் உள்ள பைப்பிற்கும் மறுபுறம் உள்ள இரும்பு கேட்டிற்கு இடையில் துணிகளை காயவைக்க கட்டப்பட்டிருந்த கம்பிக்கு இரவில் பெய்த மழையில் பல்ப் வழியாக பைப்புக்கும் மின்சாரம் பாய்ந்து அதிலிருந்து துணி காய வைத்த கம்பிக்கும் மின்சாரம் சென்றுள்ளது.
இதை அறியாமல் கீழே விழுந்த துணிகளை காயவைக்க முயன்ற போது, ​​கம்பியை தொட்டு மின்சாரம் தாக்கியதும் அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் உயிர் இழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கம்பியில் துணி காய வைத்தபோது மின்சாரம் பாய்ந்து மனைவி, காப்பாற்ற முயன்ற கணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: