சென்னை:சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் சசிகுமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குடும்பத்தினருடன் மெரினா கடற்கரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிவாக்கம் – பட்டினப்பாக்கம் வழித்தடத்தில் இயங்கும் சென்னை மாநகரப் பேருந்து 27 D, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி நிறுத்தத்தில் நின்ற போது பேருந்துக்கு பின்னால் வந்த சசிகுமார் தன்னுடைய காரை வலதுப்புறமாக இயக்கி முந்திச் சென்றுள்ளார். மீண்டும் பேருந்து சசிகுமார் காரை முந்தி செல்லும் போது சசிகுமார் தன்னுடைய காரை வலதுப்புறமாக இயக்கி பேருந்துக்கு முன்னால் சென்று திடீரென காரை நிறுத்திவிட்டு பேருந்துக்குள் ஏறி ஓட்டுனர் அருணை தாக்கியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் பேருந்தில் உள்ள கைப்பிடியை உடைத்து கடுமையாக தாக்கியதால் பேருந்து ஓட்டுநரின் காது மற்றும் கண்ணம் வீங்கி ரத்தம் கசிந்துள்ளது. மேலும் கழுத்தில் இருந்த தங்கச் செயினும் அறுந்தது. அதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் சேர்ந்து பதிலுக்கு சசிக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரும் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் சண்டையிட்ட நிலையில் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் தலைமையில் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் சசிகுமாரை அழைத்து பேருந்து ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதால் இருவரையும் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றனர். இதனால் பஸ் பயணிகள் அந்த பஸ்சில் இருந்து இறங்கி ேவறு பஸ்சில் மாறிச் சென்றனர்.
The post சென்னை மாநகர பஸ் டிரைவருக்கு அடி உதை appeared first on Dinakaran.