புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வேகேட் மேம்பாலம் அமைக்க அளவீடு பணி

புதுக்கோட்டை, ஏப்.14: புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தினசரி ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் ஒன்றிய அரசு திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் தெரிவித்து அறிவிப்பும் வெளியிட்டது. இந்த மேம்பாலமானது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்போடு கட்டப்பட உள்ள நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் புதுக்கோட்டை திருவப்பூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க முதற்கட்டமாக ரூ.32 கோடி மதிப்பில் நிலம் எடுப்பு பணி மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இது புதுக்கோட்டை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க முதற்கட்ட அளவீடு செய்யும் பணி மற்றும் புதுக்கோட்டை ரயில்வே நிலையம் அம்ருத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காகவும் தென்னக ரயில்வே முதன்மை திட்ட அலுவலர் பொன்.பாலசுந்தரம் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ரயில்வே துறை மாநில அரசோடு இணைந்து செயல்படுத்த வேண்டும் என்பதால் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எந்தெந்த பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் மேம்பாலம் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கான அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் என்னென்ன வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பொன்.பாலசுந்தரம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து தென்னக ரயில்வே முதன்மை திட்ட அலுவலர் பெண்பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், திருவப்பூர் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு அளவீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் தமிழ்நாடு அரசிடம் இருந்து வரவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு தரப்படும். மேலும் மேம்பாலம் அமைக்கும் பணி ஒன்னரை ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

The post புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வேகேட் மேம்பாலம் அமைக்க அளவீடு பணி appeared first on Dinakaran.

Related Stories: