விதை கரும்புகளை வேளாண் துறை மூலம் வழங்க கோரி அச்சுவெல்லத்துடன் வந்த விவசாயிகள்

தஞ்சாவூர், ஏப்.11: தஞ்சை மாவட்டத்தில் அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு விதை கரும்புகளை வேளாண்மைத்துறை மூலம் வழங்க கோரி, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அச்சு வெல்லத்துடன் வந்து விவசாயிகள் புகார் அளித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அந்த வகையில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் முகமது இப்ராஹிம் தலைமையில், வீரமாங்குடி பகுதியை சேர்ந்த அச்சுவெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் மாரியப்பன், இளஞ்செழியன், ஊராட்சித் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி பகுதியில் தயாரிக்கப்படும் அச்சுவெல்லத்துக்கு தமிழக அரசு புவிசார் குறியீடு பெறும் முயற்சியை வரவேற்கிறோம். அச்சுவெல்லம் தயாரிக்க பயன்படும் விதை கரும்பு பயிரிட விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. வேளாண்மைத் துறை மூலம் விதை கரும்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரமாங்குடி பகுதியில் அச்சுவெல்லம் இருப்பு வைக்க குடோன் வசதியும், விற்பனை செய்ய ஏதுவாக சந்தை வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். வீரமாங்குடி அச்சுவெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் லட்டு, பஞ்சாமிர்தம் தயாரிக்க இந்த அச்சுவெல்லத்தை பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

The post விதை கரும்புகளை வேளாண் துறை மூலம் வழங்க கோரி அச்சுவெல்லத்துடன் வந்த விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: