இடைப்பாடி, ஏப்.7: இடைப்பாடி அருகே, கோனேரிப்பட்டி ஊராட்சி கைக்கோலபாளையத்தில் வடபத்திரகாளி அம்மன், மாரியம்மன், விநாயகர், முத்துக்குமாரசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாற்றுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், காவேரிப்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா நடந்தது. சரபங்கா ஆற்றில் இருந்து பக்தர்கள் வரிசையாக வந்து கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதில் முதலில் பூசாரி தீ மிதித்தார். தொடர்ந்து பெண்கள், சிறுவர்கள் என 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும் குண்டம் இறங்கினர். 25க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். பெண்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post வடபத்திரகாளியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.