கோவை: கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில்லா கோவையை உருவாக்கும் நோக்கத்தில் நகரில் பாலசுந்தரம் ரோடு டிராபிக் பார்க் அருகில், காளப்பட்டி ரோடு நேரு நகர் பஸ் ஸ்டாப், அவிநாசி ரோடு கொடிசியா சந்திப்பு, சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் முன், சரவணம்பட்டி துடியலூர் ரோடு, எஸ்என்எஸ் கல்லூரி அருகே, பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கல்லூரி பகுதி, பாலக்காடு ரோடு கிருஷ்ணா கல்லூரி பகுதி, மருதமலை ரோடு வேளாண் கல்லூரி 7வது கேட், பேரூர் பைபாஸ் ரோடு சந்திப்பு, சாய்பாபா போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று சிறப்பு வாகன தணிக்கை முகாம் நடத்தப்பட்டது.
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 443 இருசக்கர வாகன ஓட்டிகளில், 350 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 93 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டிய 68 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.