×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மேட்டூர், மார்ச் 21: மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 29ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற தலைவரும், மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளருமான தண்டபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மேட்டூர் மின் பகிர்மான வட்ட மக்கள் குறைதீர்க்கும் குழும கூட்டம் இம்மாதம் வரும் 29ம் தேதி(புதன்கிழமை) நடைபெறுகிறது. மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற தலைவர் தண்டபாணி தலைமை வகிக்கிறார்.

இந்த கூட்டத்தில் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த அனைத்து மின் நுகர்வோர்களும், தொடர்புடைய மின்வாரிய அதிகாரிகளால் தீர்க்கப்படாத குறைகளை களைய முறையிடலாம். புகார் படிவ நகல்களை அந்தந்த பகுதி பிரிவு அலுவலகங்களிலும், செயற்பொறியாளர் அலுவலகங்களிலும், மத்திய அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை மேட்டூர் மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் வேலை நாட்களில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மனுக்கள் நடைபெற இருக்கும் மன்ற கூட்டத்தில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா