×

ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் 150 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரத்தில், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5.30 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில், ‘ஆதிநாராயணா ஹார்டுவேர்ஸ்’ என்ற பெயரில் சிமென்ட், கம்பி, டைல்ஸ், பெயின்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடையை சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவரின், வீடு பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே கண்ணப்பர் தெருவில் உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி, தனது குடும்பத்தினருடன் கடந்த 13ம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா முடிந்து நேற்று வீட்டுக்கு திரும்பியவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், தொழிலதிபர் சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 சவரன் நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சத்தியமூர்த்தி குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Sawaran ,Hardware ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!